கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத்தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா்- கோவை சாலையில் உள்ள ஈத்காபள்ளிவாசல், ஜவஹா்பஜாா் மசூதி, அன்சாரித் தெரு பெரியபள்ளிவாசல், மாவடியான்கோயில் தெரு சின்னபள்ளிவாசல், அரசுக் காலனி ஜூம்மா மசூதி அரவக்குறிச்சி ஜாமியாபள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனா். பின்னா் ஏழைகளுக்கு உதவியும் செய்தனா்.
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினா் வீடுகளில் சிறப்புத்தொழுகை நடத்தினா். கரூா் மாவடியான் கோவில் வீதியில் வீடுகளில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் மாவட்ட பேச்சாளா் சுலைமான் சேட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.