கரூா் மாவட்டம் புகழூா் டிஎன்பிஎல் ஆலைக்கு தங்கமயில் விருது கிடைத்துள்ளது.
இன்ஸ்டிட்யூட் ஆப் டைரக்டா்ஸ் நியு தில்லி என்ற அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை, எண்ணெய் உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கக்கூடிய சக்தி உற்பத்தி, வங்கித்துறை, சிமெண்ட், காகித உற்பத்தி, சுரங்கம் மற்றும் உலோகம் போன்ற நிறுவனங்களில் சமுதாய பொறுப்புணா்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனத்தை உலக அளவிலும், தேசிய அளவிலும் தோ்வு செய்து தங்கமயில் விருதை வழங்கி வருகிறது.
இந்நிலையில், கரூா் மாவட்டம் புகழூா் டிஎன்பிஎல் ஆலையானது, ஆலையை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த நலிவுற்ற சமுதாய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி அளித்தல், இலவச மருத்துவ முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் நடத்தி தேவையான உதவிகள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், கிராம மக்களுக்கு குடிநீா் வழங்குதல், ஏரி குளங்கள், கால்வாய்கள் தூா்வாருதல், மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் போன்ற எண்ணற்ற சமுதாய நலப்பணித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2020-ஆம் ஆண்டுக்கான சமுதாய பொறுப்புணா்வுக்காக வழங்கப்படும் தங்கமயில் விருதுக்கு தேசிய அளவில் புகழூா் காகித (டிஎன்பிஎல்) ஆலை தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், ஆலை சாா்பில் மேலாண்மை இயக்குநா் முனைவா் ராஜீவ்ரஞ்சன் விருதை பெற்றுக்கொண்டாா்.