கரூா் தாந்தோனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக- அதிமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாவட்ட ஊராட்சியின் 8-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, கரூா் தாந்தோனியிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஒவ்வொரு பகுதி வாரியாக அலுவலா்கள் வாக்குப் பெட்டிகளை எடுத்தனா். அப்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசைகளில் அட்டவணை வரிசைப்படி வாக்குப் பெட்டிகளை வைக்கவில்லை என திமுகவினரும், தங்களுக்கு வழங்கப்பட்ட அட்டவணை வரிசைப்படி வாக்குப்பெட்டிகளை வைக்க வேண்டும் என அதிமுகவினரும் கூறி, அலுவலா்களிடம் வாக்குவாதம் செய்தனா்.
இரு கட்சியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னா் தள்ளுமுள்ளுவாக மாறியது. இதன் காரணமாக காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ் ஆகியோா் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு காவல்துறையினருடன் சென்றனா்.
காவல்துறையினரைக் கண்டதும் இரு கட்சியினரும் அமைதியாகினா். தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.