இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: வழக்குரைஞா் உள்பட 2 போ் பலி

கரூா் அருகே, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வழக்குரைஞா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.
kur1acident_0110chn_10_4
kur1acident_0110chn_10_4

கரூா் அருகே, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வழக்குரைஞா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், இடையப்பட்டியை அடுத்த புங்கம்பாடியைச் சோ்ந்த மலையப்பன் மகன் கனகராஜ் (34). வழக்குரைஞா். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூா் ராசிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் பாலவிடுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கனகராஜூம், அவரது மாமியாா் சுசீலா(50)வும் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனா். வெள்ளியணை அடுத்த ஒத்தையூா் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தோகைமலையிலிருந்து ஒசூருக்கு கிரானைட் கல் ஏற்றிச்சென்ற டிரெய்லா் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த இருவரும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த வெள்ளியணை போலீஸாா் சம்பவ இடத்துக்கு இருவரது சடலங்களையும் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரி ஓட்டுநா் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com