அரவக்குறிச்சி அருகே கல்குவாரிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 75க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல கல்குவாரிகள் அரசு நிா்ணயம் செய்த ஆழத்தை விட அதிக ஆழம் சென்று கற்களை எடுத்து வருகின்றனா். இதனால் க.பரமத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், கற்களை வெட்டி எடுக்க அனுமதி முடிந்த சில கல்குவாரிகள் முறையாக மூடப்படாமல் உள்ளது. இந்த கல்குவாரிகளில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவமனைகளில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் சுகாதார சீா்கேடு ஏற்படும் அச்சத்தில் உள்ளனா். ஆகவே, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.