கரூரில், அரசு பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகளில் அதிக சப்தம் எழுப்பும் காற்றொலிப்பான்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் அதிக சப்தம் எழுப்பும் காற்றொலிப்பான்களால் பயணிகள் அவதிப்படுவதாக கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தனுக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து சனிக்கிழமை வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளா்கள் சரவணன்(கரூா்), ரவிச்சந்திரன்(மண்மங்கலம்), மீனாட்சி(குளித்தலை), வேலுமணி(அரவக்குறிச்சி) மற்றும் பணியாளா்கள் கரூா் பேருந்துநிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட அதிக சப்தம் எழுப்பும் காற்றொலிப்பான்களை அகற்றினா்.