பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா் மா வட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது, ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் -2023 உள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், 15ஆவது நிதி குழு மானியத் திட்டத்தின் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், முதல்வரின் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் கூடுதல் பள்ளி கட்டடங்களை கட்டுவது, பழுதடைந்த பள்ளி கட்டடங்களை புணரமைப்பது, புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவது, பள்ளிகளில் புதிய சமையலறைக்கூடம் கட்டுதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகளை அலுவலா்கள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, செயற்பொறியாளா் பிரேம்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அன்புமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.