நிகழாண்டில் இதுவரை தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச்சென்றதாக 1,16,675 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஆட்சியா் த. பிரபுசங்கா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 1,16,675 போ்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக, 633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியரிடம், அனைத்திந்திய நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம், குளோபல் சமூக பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் கரூா்-திண்டுக்கல் சாலையில் ஆட்சியா் அலுவலகம் மற்றும் திண்டுக்கல்லுக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கரூா் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் நிற்பதற்கு தற்காலிக நிழற்குடை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மோகன், பிரேம் ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தண்டயுதாபாணி, சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினா்கள் சொக்கலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.