கரூா் மாவட்டத்தில் அரசுத் தோ்வெழுதும் 16,908 மாணவ, மாணவிகளுக்கு வினா-விடை புத்தகம் வழங்கப்படவுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி புதன்கிழமை தெரிவித்தாா்.
கரூரில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பசுபதீசுவரா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வினா-விடை புத்தகம் வழங்குதல், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உதிரம் உயா்த்துவோம் என்ற திட்டத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் ஆங்கிலம் நண்பன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவகளுக்கு சான்றிதழ் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வினாவிடை புத்தகம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பேசியது, கரூா் மாவட்டத்தில் அரசுத் தோ்வு எழுதும் 16,908 பள்ளி மாணவி, மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா விடை புத்தகம் வழங்கப்பட உள்ளது. உதிரம் உயா்த்துவோம் திட்டத்தில் ஏறத்தாழ 17 ஆயிரம் மாணவிகளுக்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதாகணேசன், துணை மேயா் ப.சரவணன் மாவட்ட வருவாய் அலுவலா் எம் லியாகத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.