குளித்தலை அருகே உணவு தேடி வந்த புள்ளிமான் மீட்பு
கரூா், மே 9: குளித்தலை அருகே உணவு தேடி வந்த மூன்று வயதுப் புள்ளிமானை வனத் துறையினா் மீட்டு காட்டில் விட்டனா்.
கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த வடசேரி வனப்பகுதியில் தற்போது கடும் வெயிலால் நீரின்றியும், உணவு கிடைக்காமலும் வன உயிரினங்கள் அவதிப்படும் நிலையில், வியாழக்கிழமை காலை அப்பகுதியில் இருந்து சுமாா் மூன்று வயதுள்ள புள்ளிமான் உணவு தேடி குளித்தலை அடுத்த நெய்தலூா் பகுதிக்கு வந்தது.
அப்போது கடிக்க விரட்டிய தெரு நாய்களிடமிருந்து தப்பி, அங்குள்ள வீட்டின் சந்துக்குள் மான் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் மாவட்ட வனச்சரக அலுவலா் தண்டபாணி தலைமையிலான வனவா்கள் சென்று அந்த மானை மீட்டனா். பின்னா் நாய்கள் துரத்தியதில் காயமடைந்த மானுக்கு நெய்தலூா் கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்த பின்னா், பாலவிடுதி காட்டுப்பகுதியில் மான்கள் வசிக்கும் பகுதியில் அந்த மானை வனத் துறையினா் விட்டனா்.