பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பெரம்பலூர் -வடக்கு மாதவி சாலையில் உள்ள ராயல் நகரைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (58). இவர், தனது குடுபத்தினருடன் அரும்பாவூரில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்றார். இவரது, மகன் இப்ராஹீம் மட்டும் வீட்டில் இருந்தாராம்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு இப்ராஹீம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவீட்டு திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ. 2.60 லட்சம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி மற்றும் இதர பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 6 லட்சம் எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு, திருடிச்சென்ற மர்ம நபர்களின் கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சம்பவம் குறித்து இப்ராஹீம் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.