பெரம்பலூர் நகரின் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர்- எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறைமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பெரம்பலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளைஞரை பிடித்து, விசாரணை நடத்தினர்.
இதில், அவர் குரும்பலூர் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (20) என்பதும், பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து,ரஞ்சித்தை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.