பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று, ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே திங்கள்கிழமை அதிகாலை வந்தபோது, எதிரே சென்றுகொண்டிருந்த சிமென்ட் லாரி மீது அரசுப் பேருந்து மோதியது.
இதில், பேருந்து ஓட்டுநர் திருச்செந்தூரைச்சேர்ந்த மாரிமுத்து (35), திருச்சியைச் சேர்ந்த தயாநிதி (56), சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மனோகரி (39), திருநெல்வேலி உடன்குடியைச் சேர்ந்த ராஜலிங்கம் (52) உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெரம்பலூர் போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.