பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி புதன்கிழமை (செப்.12) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணிய ராஜா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட பிரிவு சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டிகள் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவிலிருந்து தொடங்கும் மிதிவண்டிப் போட்டியானது பாலக்கரை சென்று மீண்டும் ரவுண்டானாவில் நிறைவு பெறும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது சொந்த செலவில் மிதிவண்டியுடன், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக போட்டி நடத்தப்படும் இடத்துக்கு வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். 13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவு, 15 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவு, மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவு, 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவு, மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கு போட்டிகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு பரிசு, முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு போட்டியில் பங்கேற்றதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.