பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில், சீர்வரிசைப் பொருள்கள் வழங்காததால் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் நீண்டநேரம் காத்திருந்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை வட்டாரங்களிலிருந்து தலா 120, வேப்பூரில் 160 கர்ப்பிணிகள் என மொத்தம் 4 வட்டாரங்களிலிருந்து 520 கர்ப்பிணிகள் அழைத்து வரப்பட்டனர். 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிக்காக, காலை 9 மணியிலிருந்தே அந்தந்தப் பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த கர்ப்பிணிகளுக்கு குடிநீர் வழங்காததால், பெரும்பாலான பெண்கள் சோர்வுடன் காணப்பட்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு உடல் நலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, உயரம், எடை ஆகியவை கண்டறியப்பட்டது. மேலும், தாய்ப்பாலின் அவசியம், மருத்துவமனை பிரசவம், இணை உணவு குறித்து மருத்துவ அலுவலரால் விளக்கப்பட்டது. இதையடுத்து, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, சமூக வளைகாப்பு நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு, குடம், தட்டு, வளையல்கள், இனிப்பு வகைகள், பழ வகைகள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சீர்வரிசைப் பொருள்கள் இல்லாததால், சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் கொண்டுவந்து வழங்கப்பட்டது. இதனால், கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரமாக திருமண மண்டபத்திலேயே காத்திருந்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.