பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கவுண்டர்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில் கணினி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 2011- 2012 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில், கொட்டாரக்குன்று, மலையாளப்பட்டி, பூமிதானம், வெட்டுவால்மேடு, அ.மேட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏழைக் குழந்தைகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ம. பிரபாகரன், ம. அருண் ஆகியோர் இணைந்து, கனகம் மணி அறக்கட்டளை சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர் ந.பெ. முருகேசனிடம் மடிக்கணினி வழங்கினர். இவர்கள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும்போது ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் செல்வராஜ், ரம்யா, சரஸ்வதி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.