தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில், சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு அமைதிப் பேரணி பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பேரணிக்கு தலைமை வகித்து, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் அப்துல் நாசர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் சபீர் அலி, சாகுல் அமீது, ராஜ்முகமது அப்துல் ஹக்கீம், ஜாஹிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் ரோவர் வளைவு அருகில் தொடங்கிய பேரணி வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாகச் சென்று புறநகர்ப் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி மைதானத்தில் நிறைவடைந்தது.
பேரணியில், மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள், போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பேரணியின் முடிவில், தவ்ஹீத் அமைப்பின் பேச்சாளர் ஹஸ்ஸான், தமிழக அரசு மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.