பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் அருகேயுள்ள சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் 174 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்குத் தேவையான கல்விச்சீர் வழங்க அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி, கல்விச்சீர் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ந. ஹரிதேவி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பள்ளிக்குத் தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்கள், எழுதுபொருள்கள், தளவாடப் பொருள்களை சத்திரமனை சிவன் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பட்டதாரி ஆசிரியர் அ. ஜெயக்குமார் நன்றி கூறினார்.