பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியை காதலித்து கடத்திய காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமஙகலத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் அரவிந்தசாமி (27). சென்னையில் பணிபுரிந்து வந்த இவர், பெரம்பலூர் மாவட்டம், சித்தளி கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 படித்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெள்ளிக்கிழமை சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து, மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற அரவிந்தசாமி சென்னையில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவியை மீட்ட போலீஸார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், மாணவியைக் கடத்திய அரவிந்தசாமி, அதற்கு உறுதுணையாக இருந்த சித்தளி கிழக்குத் தெரு வெங்கேடசன் மகன் தமிழ்ச்செல்வன் (21), செல்வராசு மகன் வேல்முருகன் (25), பெரியசாமி மகன் செல்வராஜ் (25) ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.