திருவள்ளுவர் தினமான புதன்கிழமை பெரம்பலூரில் மது விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2,500 மது பாட்டில்களைப் போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனர்.
திருவள்ளுவர் தினமான புதன்கிழமை அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மது அருந்தும் கூடங்களுககு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பெரம்பலூர் நகரில் இயங்கும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், தனியார் மது அருந்தும் கூடங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், பெரம்பலூர் நகரில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவின்பேரில், துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான போலீஸார், பெரம்பலூர் நகரின் பிரதான இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் ஆத்தூர் சாலை ஆகியப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரைப் போலீஸார் பிடித்து, அவர்களிடமிருந்து 2,500 மதுபாட்டில்களும், ரூ. 35 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மது விற்பனையில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜா (29), தொண்டாபாடியைச் சேர்ந்த பிச்சைபிள்ளை மகன் சுப்ரமணி (45), காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் வேலு (28) ஆகியோரை கைது செய்தனர்.