பெரம்பலூர் அருகே போலி மதுபானம் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் மகன் நித்தியானந்தம் (31), திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் உமாகாந்தன் (32), அதே பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் வினோத்குமார் (32). இவர்கள் மூவரும், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் போலி மது தயாரித்து விற்றனர். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் மேற்கண்ட மூவரையும் அண்மையில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க தடுப்புச் சட்டத்தின் கீழ், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட, அதற்கான உத்தரவு நகல், திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை மாலை வழங்கப்பட்டது.