சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் என். செல்லதுரை, மாநிலக் குழு முடிவுகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மளையாளப்பட்டி அருகேயுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்காச்சோள மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 7,410, நஞ்சையில் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 10,500 நிவாரணம் வழங்குவதாக அரசால் அறிவிக்கப்பட்டு, இதுவரையில் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
பெரம்பலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, வறட்சி நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் சி. கோவிந்தன், கருப்புடையார், கோகுலகிருஷ்ணன், சின்னக்கண்ணு, விநாயகம், செல்லதுரை பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.