வரும் சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சிக்கே மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க நாயுடு பேரவை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாநிலத் தலைவர் காமாட்சி பேசியது:
எங்களது சமூகத்தில் 1.20 கோடி பேர் உள்ளனர்.
நாயுடு இனத்தில் உள்ள உள்பிரிவு, சில இனப்பிரிவு ஓ.சி பட்டியலில் உள்ளதை பி.சி பட்டியலிலும், பி.சி பட்டியலில் உள்ள சில இனப் பிரிவுகளை எம்.பி.சி பட்டியலிலும் இணைக்க வேண்டும். எங்களது சமுதாயத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
வரும் சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கும் கட்சிக்கு, மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
தற்போது அதிமுக-வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
கூட்டத்துக்கு, மாநிலச் செயலர் கண்ணன், மாநில பொருளாளர் வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், துணைத் தலைவர்கள் நடராஜன், ராஜேசேகரன், வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.