பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர சப்பர பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் 158 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. இக்கோயிலின் ஆண்டுப் பெருவிழா மற்றும் சப்பரத் தேரோட்டம் கொடியேற்றத்துடன் கடந்த ஏப். 26 ஆம் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, நாள்தோறும் பங்கு குருக்குள் தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
சனிக்கிழமை மாலை, கோட்டப்பாளையம் பங்கு குரு அகஸ்டின் தலைமையில் சிறப்பு திருப்பலியும், இரவு காவல் தூதர், வன அந்தோணியார், உயிர்த்த இயேசு, சூசையப்பர், தேவமாதா சொரூபங்கள் அடங்கிய ஆடம்பர சப்பர பவனி ஆகியவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்புப் பாடல் திருப்பலி, அடைக்கலசாமி தலைமையில் நடத்தப்பட்டது. மாலையில் சப்பர பவனியைத் தொடர்ந்து 6 மணிக்குக் கொடியிறக்கம் நடைபெற்றது. இதில், பாளையம், குரும்பலூர், ரெங்கநாதபுரம், அம்மாபாளையம், பெரம்பலூர், சத்திரமனை, வேலூர், கோட்டப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை பங்கு குரு ஜான்கென்னடி தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.