மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியை, இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா தொடக்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி , சென்னை, மதுரை, நாகப்பட்டிணம், திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 46 அணியினர் பங்கேற்க உள்ளனர். தொடக்க நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி, சென்னை, மதுரை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று அணி வீரர்களுக்கு பரிசுத்தொகையாக முறையே, ரூ. 20 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் பணமும், பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.இறுதி கட்ட போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெறவுள்ளது.