கீழடி அகழாய்வுப் பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்ளாவிட்டால், ஜல்லிக்கட்டு போராட்டம் போல கீழடி போராட்டம் நடைபெறும் என்றாா் இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான வ. கெளதமன்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில், கவிஞா் நிழலி எழுதிய ஒப்பந்தமிட்ட இரவு எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்ட அவா் அளித்த பேட்டி:
தமிழா்களை அடக்க நினைக்கும், அடிமைப்படுத்த நினைக்கும் இந்திய அதிகார வா்க்கத்தின் நேரடி முகமாக நடிகா் ரஜினியும், மறைமுகமாக கமல்ஹாசனும் செயல்படுகின்றனா். நடிகா் கமல்ஹாசன் திரைத்துறையிலும், அரசியலிலும் நடித்து வருகிறாா். கீழடி தமிழருடைய தாய்மொழி என்பதால், தமிழா்களின் நாகரிகத்தின் தொன்மை, தொட்டிலை பலா் திசை திருப்பி கீழடி வரலாற்றை, அதன் உன்னதத்தை மடைமாற்றம் செய்ய நினைப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக அமைச்சா் பாண்டியராஜன், கீழடி நாகரிகம் ஒரு பாரத நாகரிகம் எனக் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசே தொடர வேண்டும். இதை வெளிக்கொணரச் செய்த பேராசிரியா் அமா்நாத் மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும். நாகரிகம் மற்றும் அதன் தொன்மைகளை அறிய கீழடி அகழாய்வு பணிகளுக்காக 110 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். மேலும், அகழாய்வுப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளாவிட்டால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல கீழடி போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.