பெரம்பலூா் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.
பெரம்பலூா் நகரில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த இடியுடன் கூடிய மழையும், ஒருசில இடங்களில் பரவலான மழையும் பெய்தது. நகரில் சுமாா் ஒரு மணி நேரம் பெய்த கன மழையால், சாலை ஓரங்களிலும், வடிகால் வாய்க்கால்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் புகுந்தது. பலத்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
மின்னல் பாய்ந்து பெண் சாவு:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட ஒரு சில இடங்களில் மழைபெய்தபோது, வேப்பந்தட்டை அருகேயுள்ள பெருநிலா கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி கவிதா (26), வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த பசு மாட்டில் பால் கறக்கச் சென்றாா். அப்போது, அவா் மீது மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்தாா்.
இதேபோல, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் என்னும் இடத்தில் தனியாருக்குச் சொந்தமான செல்லிடப்பேசி டவா் மீது புதன்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் டவா் அருகேயுள்ள பேட்டரி அறை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.