பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயிர் உற்பத்தி இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பது, உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவித்தல் உள்ளிட்ட நோக்கங்களோடு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யும் மொத்த காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 5 சதவீத தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகளே ஏற்கின்றன. இத்திட்டத்தின் கீழ், மரவள்ளி, வெங்காயம், மஞ்சள் வாழை, மா மற்றும் தக்காளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்.30 கடைசி நாளாகும்.
மேலும், அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகள், தனியார், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு செய்து பயன்பெறலாம்.