வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணியை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணிய ராஜா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே உணர்த்தும் வகையில் நடைபெற்ற பேரணியில், பள்ளி விளையாட்டு மற்றும் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர். பாலக்கரையில் தொடங்கி, வெங்கடேசபுரம் வழியாக சென்று ரோவர் நுழைவு வாயில் வரை சென்ற இப்பேரணி, புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில், தடகளப் பயிற்சியாளர் கோகிலா, ஸ்கேட்டிங் பயிற்றுநர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூர் : முழு வாக்குப் பதிவை வலியுறுத்தி அரியலூர் நகர்ப் பகுதியிலுள்ள நியாவிலைக் கடைகளுக்கு வந்த மக்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிர் சங்கர் ஆகியோர் இந்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தினர்.