ஆடிப்பூரத்தை முன்னிட்டு, துறைமங்கலத்தில் எழுந்தருளியுள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் பால்குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் புதுக்காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிவ சக்தி மகா மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து கே.கே.நகர், பள்ளிவாசல் தெரு, புதுக்காலனி வழியாக சென்ற பால்குட ஊர்வலம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்துக்கு வந்தடைந்தது.
இதையடுத்து, அம்பாளுக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை 6 மணியளவில் ஆடிப்பூர வளையல் அலங்காரம் மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று அம்பாளைத் தரிசனம் செய்தனர்.
நாக சதுர்த்தி விழா:
பெரம்பலூர் வடக்கு தெப்பக்குளம், மதர்ஸா சாலையில் உள்ள அருள்மிகு அம்ஸா நாக கன்னியம்மன் திருக்கோயிலில், ஆடிப்பூர நாக சதுர்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, ஐயப்பன் கோயிலில் இருந்து நகரின் பிரதான சாலைகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட பால் குட ஊர்வலம் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, காலை 10 மணி முதல் 12.45 வரை பரிகார ஹோமம், சிறப்பு அர்ச்சனை, நாக கன்னியம்மனுக்கு மஹா தீப ஆராதனை நடைபெற்றது.
இதில், பெரம்பலூர் நகரைச் சேர்ந்த திரளான பெண்கள் பங்கேற்று நாக கன்னியம்மனை தரிசனம் செய்தனர்.