பெரம்பலூரில் சிறுவர், சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 350- க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள மரகதம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளை, அகில இந்திய செஸ் போட்டிகளுக்கான நடுவர் சண்முகம் தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட செஸ் அசோசியேசன் தலைவர் சரவணன், செயலர் அலெக்ஸாண்டர், பொருளாளர் அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 11 வயதுக்குள்பட்டோர், 11 வயது முதல் 14 வயது வரை உள்ளோர், 14 வயது முதல் 17 வயது வரை உள்ளோர் என 3 பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டிகள் ஆண், பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக நடைபெற்றது. இதில் 350 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில், அதிக புள்ளிகள் பெற்ற 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், பள்ளி முதல்வர் நிருபா சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.