பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 253 அளிக்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்துக்குள் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றித் தருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 253 மனுக்கள் அளிக்கப்பட்டன. தலைகீழாக நடந்து வந்த முதியவர்:
குன்னம் வட்டம், வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பொன்னுசாமி (79). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது, தந்தைக்கு சொந்தமான நிலம் 88 செண்ட் வடக்கலூரில் உள்ளது. இதில், 44 செண்ட் நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஒருவருக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியரால் தனிப் பட்டா கொடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் 10 ஆண்டுகளாக மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த பொன்னுசாமி, அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தலைகீழாக நடந்தபடி மனு அளிக்க வந்தார். இதையறிந்த, போலீஸார் முதியவர் பொன்னுசாமியை சமாதானப்படுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். மனுவை பெற்றுக்கொண்டு, விரைவில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உறுதி அளித்ததை தொடர்ந்து, முதியவர் அங்கிருந்து சென்றார்.