பெரம்பலூர்: பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ஜூனியர் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பை சென்னை வென்றது.
பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான 32-வது டேக்வாண்டோ போட்டி பெரம்பலூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், 17- 20 வயது வரையிலும், 42, 45, 47, 50, 52 என உடல் எடையளவிலும் என 7 வகையாக ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில், சென்னை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், அரியலூர், நாகை உள்பட 26 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 526 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 3 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜூனியர் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று சென்னை முதலிடமும், பெரம்பலூர் இரண்டாமிடமும், நீலகிரி மூன்றாமிடமும், ஜூனியர் ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி முதலிடமும், வேலூர் இரண்டாமிடமும், கோவை மூன்றாமிடமும் பெற்றது.
சீனியர் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் வென்று வேலூர் முதலிடமும், திருவள்ளூர் இரண்டாமிடமும், பெரம்பலூர் மூன்றாமிடமும், சீனியர் ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி முதலிடமும், வேலூர் இரண்டாமிடமும், தூத்துக்குடி மூன்றாமிடமும் பெற்றது. முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.