பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நத்தக்காடு கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களைச் சீரமைக்கும் பணியில் இளைஞர்களும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
பருவ மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
பெய்யும் மழை நீரைச் சேமிக்கும் விதமாகவும், ஏரி, குளங்களை மீட்டெடுக்கும் விதமாகவும் ஆங்காங்கே பல கிராமங்களில் இளைஞர்களும், கிராம மக்களும் இணைந்து நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மருதையாற்றின் கிளை ஓடைகளுள் ஒன்றான சிறுகன்பூர் ஓடை பாயும் நத்தக்காடு கிராமத்தில் உப்பேரி மற்றும் குளம் உள்ளது. இதன் மூலம் விவசாயக் கிணறுகளின் நீர்மட்டம், கால்நடைகளுக்கான தண்ணீர் தேவைகள், குளிப்பது என பல்வேறு வழிகளில் பயனளித்து வந்த நீர்நிலைகள் தற்போது நிலவும் வறட்சியால் வறண்டு, ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்களால் மண்டிக் காணப்பட்டன.
இதையறிந்த இளைஞர்களும், கிராம மக்களும் இணைந்து நிதி திரட்டி சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரிகளை முறையாக ஆழப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனர். மழை நீர் வாய்க்கால்கள் வழியாக இந்த ஏரிகளை நிறைத்து, உபரி நீர் மருதையாற்றின் கிளை ஓடையில் கலக்கும்படியான கட்டமைப்பு உள்ளது.
இதனால், இந்த நீர்நிலைகளை முறையாக ஆழப்படுத்தினால் மழைக் காலங்களில் கூடுதலாக தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் என்கின்றனர் கிராம மக்கள்.