பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அனில் மேஷராம், விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகள், உரங்கள் இருப்பு, சோலார் மின்வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பெரம்பலூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, பயனாளிகளின் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வாலிகண்டபுரம் ஊராட்சியில் 0.965 ஹெக்டேர் பரப்பளவில் அய்யன்குளம் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்தப்படும் பணிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் சான்றிதழ்கள் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்படும் முறைகள், கிராமப்புறங்களில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி அளிக்கும் கூடங்கள், மகளிருக்காக மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளிடம் பயன்கள் குறித்து கேட்டறிந்தார் அனில் மேஷராம்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி. ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குநர் (பொ) நாகரத்தினம், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மகாலிங்கம், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.