தாங்கள் பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு நிரந்தரப் பட்டா வழங்கக் கோரி எறையூர் பகுதி நரிக்குறவர்கள் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம் நரிக்குறவர் சங்கப் பொருளாளர் பாபு தலைமையில் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 45 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான 300 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம்.
நிகழாண்டில் மக்காச்சோளம் சாகுபடி செய்த நிலையில் படைப்புழுவால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் பட்டா இல்லாததால், ஹெக்டேருக்கு ரூ.7000 வீதம் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிரந்தரப் பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எங்களின் வாழ்வாதாரம் கோரி, நாங்கள் பயன்படுத்தி வரும் நிலத்துக்கு நிரந்தரப் பட்டா வழங்க வேண்டும்.
சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் அளித்த மனு: பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் நடத்தும் விடுதிகளில் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதும், மர்மமாக உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து விசாரித்து, தவறிழைக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குன்னம் பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆரோக்கிய நாதன் அளித்த மனு: குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடமாடவும், போக்குவரத்துக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, இலகுவான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.