வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனர். இதனால் வழக்காடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு செய்து தர வேண்டும். தொழிலில் ஈடுபடும் முதல் 5 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்க வேண்டும். வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய விசாலமான கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.
பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் இ. வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் முகமது இலியாஸ் ஆகியோர் தலைமையில், 350 -க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வழக்காடிகள் தங்களது வழக்கு தொடர்பான நீதிமன்ற நடைமுறைகளை தொடர முடியாமல் அவதியடைந்தனர்.
அரியலூர், ஜயங்கொண்டத்தில்... அரியலூர், ஜயங்கொண்டத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனர். போராட்டத்துக்கு அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். போராட்டத்தால் வழக்காடிகள் அவதியடைந்தனர்.