பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே கார் மீது டிப்பர் லாரி மோதியதில், வெளிநாட்டிலிருந்து வந்த பெண் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பட்டக்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது உசேன் மனைவி சம்சீனீசா (42). இவரது உறவினர் முஜாகிதீன் (20). இவர்கள் இருவரும், வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தனர். இருவரையும் சென்னையிலிருந்து அவர்களது உறவினர் சாகுல் அமீது, தவ்ஹீத் ஆகியோர் காரில் அழைத்து வந்துகொண்டிருந்தனர். காரை, அதே பகுதியைச் சேர்ந்த சேதுராமன் மகன் அருண் குமார் (22) ஓட்டி வந்தார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அருகேயுள்ள பூமலை எனும் இடத்தில் கார் வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், சம்சீனீசா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சாகுல் அமீது, முஜாகிதீன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மற்ற இருவரும்லேசான காயமடைந்தனர். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.