கலைப் பண்பாட்டுத் துறையின் திருச்சி மண்டலம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இசைக் கலைஞர்களுக்கு கலை விருதுகள், விலையில்லா இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த 20 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைசுடர்மணி, கலைநன்மணி, கலைமுதுமணி ஆகிய பிரிவுகளில் விருதுகளையும், ரூ.1.85 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் 10 கலைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் விலையில்லா இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்களும் ஆட்சியரால் வழங்கப்பட்டன.
முன்னதாக, நாட்டுப்புறக் கலைஞர்களின் கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து ஆகிய கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சீனிவாசன், முதன்மைக் கல்வி அலுவலர் கு. அருளரங்கன், கலைப் பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் ஹேமநாதன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.