பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட மக்கள் பயன்பாடு அதிகமுள்ள பிரதான சாலைக்கு, தமிழ்ச்சாலை என பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் நகராட்சி நிர்வாகத்தில் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரில் தலைவர்கள் பெயர் சூட்டப்படாத, மக்கள் பயன்பாடு அதிகமுள்ள ஏதேனும் ஒரு முதன்மை சாலைக்கு, தமிழ்ச்சாலை என பெயர் சூட்ட வேண்டுமென தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் நகரில் மக்கள் பயன்பாடு அதிகமுள்ள, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் முதல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் நான்கு சாலை சந்திப்பு வரையிலான முதன்மை சாலைக்கு "தமிழ்ச்சாலை' என பெயர் சூட்ட, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா அனுமதி அளித்துள்ளார்.
அவரது அறிவுறுத்தலின்படி, மேற்கண்ட சாலைக்கு தமிழ்ச்சாலை என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் எழுத்துப் பூர்வமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என, நகராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.