கும்பகோணத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் 94 குழந்தைகளை பலியாக்கிய தீ விபத்தின் 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், கே.கே.நகரிலுள்ள அன்பகம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் பயிலும் குழந்தைகள், தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும், சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிறப்புப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.
சமூக நல கூட்டமைப்பு சார்பில்:
இதேபோல, பெரம்பலூர் சமூக நல கூட்டமைப்பு சார்பில் புதிய மதனகோபாலபுரத்தில் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும், குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினர்.