விளையாட்டுத் துறையில் திறன்கண்டறிதல் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகளத் தேர்வுப் போட்டிகள் ஆக. 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விளையாட்டுத் துறையில் சிறந்த, திறமையுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்கு, மாவட்ட விளையாட்டரங்கில் பயிற்றுநர்களைக் கொண்டு முறையான பயிற்சி அளித்திடும் வகையில், திறன் கண்டறிதல் திட்டம் கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு தடகள விளையாட்டுக்கு திறன் கண்டறிதல் திட்டத்தின் கீழ் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இப் பயிற்சி முகாமில் சேர்ந்து பயனடைய 10 வயது முதல் 14 வயது வரையுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோரும் ஆக. 2 ஆம் தேதி காலை 8 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள தடகள தேர்வுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட தடகளப் பயிற்றுநர் க. கோகிலா (88254 76156), மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தை (93608 70295), அலுவலக நேரங்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.