பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 30 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கோலப் போட்டி, தண்ணீர் நிரப்பும் போட்டி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற மருத்துவமனை தின விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில், மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவர் ராஜா, செவிலியர் கண்காணிப்பாளர் மல்லிகா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.