கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, அனைவரும் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ. முரளீதரன்.
உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு வேலைக்கு அமர்த்துவோர் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவர். குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது தெரிந்தால், உடனடியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்புகொண்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஆசிரியர் மாணவ, மாணவிகளிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. எனவே, அனைத்துப் பிரச்னைகளுக்கும் தயங்காமல் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி அனைவரும் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் நடுவர் ஏ. முரளீதரன்.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான எம். வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ப. கருப்பசாமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், வழக்குரைஞர் காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் டி. வெள்ளைச்சாமி தலைமையிலான குழுவினர் செய்தனர்.