ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலத்தூர் கேட்டில் இருந்து, அரியலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கியது. இந்த சாலைப் பணிகள் முடிவடைந்த நிலையில், இலுப்பைக்குடி கிராமத்திற்குள் சுமார் 150 மீட்டர் சாலை மட்டும் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக பழைய தார் சாலையை பெயர்த்து விட்டு, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
இது சம்பந்தமாக ஒப்பந்ததாரர் ராமநாதனிடம் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் சாலைப் பணியை தொடங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலத்தூர் கேட் - அரியலூர் சாலையில் இலுப்பைக்குடி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேற்கண்ட சாலையை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் திங்கள்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்றனர். இதையறிந்த கிராம மக்கள், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலைப் பணியைத் தொடங்க வேண்டுமெனவும், நெடுஞ்சாலைத் துறையினரின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், மருவத்தூர் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், ஆலத்தூர் கேட்- அரியலூர் சாலையில் சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.