பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசுக் கல்லூரியில் நிகழாண்டு 11 பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
குரும்பலூரில் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி நிகழாண்டு முதல் அரசுக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கல்லூரியில் இளநிலையில் 14 பாடப் பிரிவுகளும், முதுநிலையில் 6 பாடப்பிரிவுகளும் என மொத்தம் 20 பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
அரசுக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிகழாண்டு முதல் இளநிலையில் 5 பாடப்பிரிவுகள், முதுநிலையில் 6 பாடப்பிரிவுகள் என மொத்தம் 11 பாடப்பிரிவுகளில் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், 11 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், அக்கல்லூரி மாணவ, மாணவிகளில் மற்றொரு பிரிவினர் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை காலை கல்லூரி எதிரே பெரம்பலூர்- துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.