திமுக கூட்டணி சார்பில், பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாரிவேந்தர் மற்றும் தொல். திருமாவளவனின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சியினர் பாடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டது.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், அக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் எம்.எம். அப்துல்லா, அரியலூர் மாவட்ட திமுக செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, மக்களவைத் தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியினரின் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை வெற்றி பெறச் செய்வது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாதுகாக்க முயற்சிக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.