பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி முடித்தவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு மே 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. அருளரங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் மாதம் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் அல்லது மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாகவும் இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்னும் இணையதளத்திற்குச் சென்று HS First Year Examination March/April 2019 RT-1 application for Registration என்ற இணைப்பை கிளிக் செய்து, யூசர் ஐடி, பாஸ்வேர்டைப் பதிவு செய்த பின்னர் திரையில் தோன்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவைப்படும் நகல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
விடைத்தாளின் நகல் பெற விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 275, மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ. 305, இதர பாடங்களுக்கு தலா ரூ. 205 செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
மதிப்பெண் பட்டியல்: பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவர்கள் மே 14-ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளில் அல்லது தேர்வு எழுதிய மையத்தில் தலைமை ஆசிரியர் மூலம் தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். 16-ஆம் தேதி முதல் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை, தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலில் பள்ளி மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியரும் சான்றொப்பமிட்டிருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்.