தொழில் பயிற்சி நிலையங்களில் பயின்று தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்கள், அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழில் பிரிவுகளில் பயின்று தேசிய சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் இதே பிரிவில் தனிநபராக அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். மேலும்
ஐ.டி.ஐ படித்து தேசிய தொழில் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், தொழில் பழகுநர் பயிற்சியை தொழில்சாலைகளில் முடிக்காதவர்கள் ஆகியோர் மத்திய அரசு நடத்தும் தொழில் பழகுநர் தேர்வில் பங்கேற்கலாம். ஆன்லைன் தேர்வுகள் மே 29 முதல் 31 ஆம் தேதி வரையும், பாடவாரியான எழுத்து தேர்வுகள் ஜூன் 11 ஆம் தேதி பொறியியல் வரைபடம் காலை 9.30 மணிக்கும், ஜூன் 12 முதல் 14 ஆம் தேதி வரை காலை 9.30 மணிக்கும் செய்முறை தேர்வும் நடைபெறும்.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை தொடர்புகொண்டு மேலும் விவரம் அறியலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநரை அணுகி, விவரங்களை பூர்த்தி செய்து தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ. 200. மேலும் விவரங்களுக்கு 04328-225532, 70107 85477, 94883 11578, 63800 71947 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.