அரசால் தடை செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும், விதிமுறையை மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகம், பள்ளி வாசல் தெரு, தலைமை அஞ்சலகத் தெரு, தினசரி மாா்க்கெட் தெரு ஆகிய பகுதிகளில் நகராட்சி அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரூ. 1 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுலா்கள், சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் ரூ. 32 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.